நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவரை டெங்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை 84,724 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இதில், ஜூலை மாதத்தில் மட்டும் நேற்று (30) வரையான காலப்பகுதியில் 29,350 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியாக அதிகளவான டெங்கு நோயாளிகள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 17,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 16,814 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,873 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண ரீதியில், மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 44,829 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், தென் மாகாணத்தில் 12,738 பேரும், மத்திய மாகாணத்தில் 7,370 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருத்தல், நுளம்பு பெருகும் இடங்களை அழித்தல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுதல் ஆகியவற்றை அதிகாரிகள் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.








