நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொள்கலன் லொறிக்கு தீ வைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20, 25 மற்றும் 26 வயதுடைய நீர்கொழும்பு, தாகொன்ன மற்றும் கிம்புலாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று (31) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் கைவிடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டு பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை, நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் போலவலாட்ட பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட கொள்கலன் லொறியுடன், நீர்கொழும்பு நோக்கி அதிவேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 18 மற்றும் 20 வயதுடைய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த சிலர் கொள்கலன் லொறிக்கு தீ வைத்து சேதப்படுத்தியிருந்தனர்.
சம்பவ இடத்தில் பதிவான CCTV காணொளிகள் மற்றும் ஏனைய ஆதாரங்களின் அடிப்படையில், தீவைப்புச் சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.








