மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளை கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த விஜயகுமார் விஜயகாந்த் (19) என்பவர் கடந்த சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் சிறிய படகில் தனியாக கடலுக்குச் சென்றிருந்தார். எனினும், மறுநாள் காலை வரை அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் கவலையடைந்து களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து, கடற்படையினரும் உள்ளூர் மீனவர்களும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தேடுதலின் போது, இளைஞன் பயன்படுத்திய படகு கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அவர் அதில் இல்லாததால் தேடுதல் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை கல்முனைக்குடி மற்றும் கல்முனை கடற்பகுதிகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் சடலம் மிதந்துகொண்டிருப்பதை மீனவர்கள் அவதானித்து மீட்டுள்ளனர். பின்னர் சடலம் களுதாவளைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளை தொடர்ந்து, சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை குடும்பத்தினர் முன்வைத்துள்ள நிலையில், சம்பவத்தின் உண்மை காரணத்தை கண்டறியும் நோக்கில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








