பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுங் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது மிக விரைவாக வழக்குப்பதிவு செய்து, விசாரணைகளை முடித்து அவர்களுக்குக் நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று பொலிஸ் உயர் அதிகாரிகளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, அது தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள், சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் தலைமை சட்டத்தரணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை நீதிமன்றங்களில் மிகவும் விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இவ்வாறான வழக்குகளை முறையாக நடத்தி, நீதிமன்றம் மூலம் பெற்றுத்தரப்படும் கடுமையான தண்டனையானது, எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாகவும், அவர்களைத் தடுக்கும் விதமாகவும் அமைய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், அரசு தலைமைச் சட்டத்தரணி விஜய் நாராயண், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் மரியம் பல்லவி பல்தேவ், பொலிஸ் தலைமை இயக்குநர் (DGP) டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர் உட்படப் பொலிஸ் பிரிவு மற்றும் அரசுத் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.








