நியூசிலாந்து அரசு, வேலைவாய்ப்பு விசா மற்றும் முதலீட்டு விசா தொடர்பான முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் எதிர்வரும் ஜூன் 1 முதல் அமலுக்கு வரவுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு வழங்குநர் வேலை விசா (Accredited Employer Work Visa) மற்றும் செயலில் உள்ள முதலீட்டாளர் பிளஸ் விசா – வளர்ச்சி பிரிவு (Active Investor Plus Visa – Growth Category) ஆகிய திட்டங்களின் கீழ் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய விதிகளின்படி, திறன் நிலை 3 (Skill Level 3) வேலைகளுக்காக விண்ணப்பிப்பவர்களும் இனி ஆங்கில மொழித் திறனை நிரூபிக்க வேண்டும். இதற்கு முன்னர் இந்த நிபந்தனை திறன் நிலை 4 (Skill Level 4) மற்றும் திறன் நிலை 5 (Skill Level 5) வேலைகளுக்கு மட்டுமே பொருந்தியது.
இதன் மூலம் ஹோட்டல், வர்த்தகம் மற்றும் பல்வேறு சேவைத் துறைகளில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்கள் அடிப்படை ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளும் திறன் கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்ட், அன்றாட ஆங்கிலத் தொடர்பாடல் திறன் பணியாளர்கள் தங்களது உரிமைகளை புரிந்துகொள்வதற்கும், சமூகத்துடன் சிறப்பாக இணைவதற்கும் உதவும் என தெரிவித்தார்.

எனினும், உலகளாவிய பருவகால பணியாளர் விசா (Global Workforce Seasonal Visa) மற்றும் உச்ச பருவகால பணியாளர் விசா (Peak Seasonal Visa) திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்போருக்கு இந்த ஆங்கில மொழித் திறன் நிபந்தனை பொருந்தாது.
அதேவேளை, முதலீட்டு விசா பிரிவில், செயலில் உள்ள முதலீட்டாளர் விசா – வளர்ச்சி திட்டம் (Active Investor Visa Growth) மூலம் விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 5 மில்லியன் நியூசிலாந்து டொலர்கள் முதலீடு செய்ய வேண்டும். இதில் 20 சதவீதம் (1 மில்லியன் டொலர்கள்) வரை சமூக நல நன்கொடைகளுக்காக ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள தொகை அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள சொத்துகள் மற்றும் முதலீட்டு திட்டங்களில் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் திறமையான குடியிருப்பு அனுமதி பாதைகள் (Skilled Residence Pathways) என்ற இரண்டு புதிய நிரந்தர குடியிருப்பு திட்டங்களையும் அறிமுகப்படுத்த நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மாற்றங்கள், நியூசிலாந்தில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் மொழித் திறனை மேம்படுத்துவதோடு, முதலீட்டாளர்களின் சமூகப் பங்களிப்பையும் அதிகரிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








