புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான அனுமதி கோரி சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் டெங்கு பரவல் மற்றும் அதற்கெதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அவரின் கூற்றுப்படி, இந்த மாதத்தில் இதுவரை மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது, இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச டெங்கு நோயாளர் எண்ணிக்கையாகும். இருப்பினும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் டெங்கு பரவல் ஓரளவு குறையும் என சுகாதாரத் துறை எதிர்பார்க்கிறது.
மேலும், டெங்கு நோய் ஏற்படுவதற்கு முன்பே செலுத்திக்கொள்ளக்கூடிய புதிய தடுப்பூசி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது நோயிலிருந்து பாதுகாப்பளிக்கும் என நம்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இது புதிதாக அறிமுகமான தடுப்பூசி என்பதால், அதன் நீண்டகால செயல்திறன் குறித்து தற்போது உறுதியான முடிவுகளை கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, உலகின் பல நாடுகள் இந்த டெங்கு தடுப்பூசிக்கு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதனை இலங்கையிலும் பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.








