இலங்கையில் தற்போதைய எரிபொருள் விலைக் கொள்கை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்காது என்றும், டீசல் விலை கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று (25) இடம்பெற்ற ஊடக நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய பொருளாதார தரவுகளின் அடிப்படையில் ஒரு லீற்றர் டீசலின் விலை சுமார் 600 ரூபாய் வரை உயர்த்தப்பட வேண்டிய நிலை காணப்படுவதாக குறிப்பிட்டார். அதேபோல் பெட்ரோல் விலையும் குறைந்தது 20 முதல் 30 ரூபாய் வரை அதிகரிக்கப்பட வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலைகளை அரசியல் காரணங்களுக்காக அல்லது செயற்கையாக குறைந்த நிலையில் வைத்திருப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார். குறிப்பாக இது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைய வழிவகுக்கும் என்றும், ரூபாயின் பெறுமதி குறையும்போது இறக்குமதி செலவுகள் அதிகரித்து, பின்னர் எரிபொருள் விலைகளும் மேலும் உயர வேண்டிய சூழல் உருவாகும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
கடந்த காலங்களில் இதேபோன்ற சுழற்சியே பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், விலை திருத்தங்களை தாமதப்படுத்துவதால் பணவீக்கம் மேலும் மோசமடையக்கூடும் என்றார்.
எனினும், எரிபொருள் விலை உயர்வுகள் மக்களுக்கு நேரடியாக சுமையாக மாறாத வகையில் சமூக மானிய திட்டங்கள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக பொதுப் போக்குவரத்து சேவைகள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலக்கு அடிப்படையிலான மானியங்களை வழங்க முடியும் என்றார்.
அனைவருக்கும் ஒரே மாதிரியான மானியத்தை வழங்குவதற்குப் பதிலாக உண்மையில் உதவி தேவைப்படுவோருக்கு நேரடியாக ஆதரவு வழங்குவது அரசுக்கு பொருளாதார ரீதியாகவும் பயனுள்ளதாக இருக்கும் என தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்மூலம் எரிபொருள் விலை திருத்தங்களின் தாக்கத்தை குறைத்து, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.








