யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் குறித்து, பொலிஸார் தாக்கல் செய்துள்ள பொய் வழக்குத் தொடர்பான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) பலாலி பொலிஸாரால் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்குமூலம் வழங்கிய பின்னர் நேற்று திங்கட்கிழமை (25.05.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.
“கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக எம்மால் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அன்றைய தினம் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தைக் குலைக்கும் வகையில் பொலிஸார் பல்வேறு அடக்குமுறைச் செயற்பாடுகளை மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, மல்லாகம் நீதிமன்றத்தில் பொலிஸார் எமக்கு எதிராக முற்றிலும் பொய்யான வழக்கினைக் பதிவு செய்தனர். நாம் பொதுப் போக்குவரத்துக்கும், பொலிஸாரின் கடமைகளுக்கும் இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சாட்டியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கிற்காக நாங்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த போது, இது தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குமூலத்தைப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வழங்குமாறு நீதிமன்றம் எமக்கு அறிவுறுத்தியது. நீதிமன்றத்தின் அந்த உத்தரவுக்கு இணங்கவே, கடந்த 24 ஆம் திகதி பலாலி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலத்தைப் பதிவு செய்தோம்.
நாங்கள் இந்தத் தையிட்டி போராட்டங்களை முற்றிலும் ஜனநாயக முறையில், நீதிமன்றக் கட்டளைகளுக்கும் பொலிஸாரின் சட்டபூர்வ அறிவுறுத்தல்களுக்கும் மதிப்பளித்தே நடத்தி வருகின்றோம்.
இருப்பினும், எமது நியாயமான போராட்டங்களை முடக்கி, சட்டவிரோத விகாரைக்கு அந்தத் தமிழ் மக்களின் காணியை முழுமையாகக் கையளித்து விட வேண்டும் என்ற நோக்கில், இனவாதப் பொலிஸாரால் எங்களுக்கு எதிராக அவ்வப்போது இவ்வாறு பொய் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அதன் ஒரு அங்கமாகவே இந்த வாக்குமூலப் பதிவும் அமைந்துள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








