மட்டக்களப்பு, குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கிகளுடன் இரு விவசாயிகள் நேற்று திங்கட்கிழமை (25) குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகத் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பிமலைப் பகுதியில் சட்டவிரோத ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினையடுத்தே இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டது. சம்பவ தினமான நேற்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில், குடும்பிமலை வயல் பகுதியைச் சிஐடி (CID) அதிகாரிகள் திடீரெனச் சுற்றிவளைத்துத் தீவிர சோதனை நடவடிக்கையை நடத்தினர்.

இதன்போது, அந்த வயல் பகுதியில் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமான இரண்டு உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கிகள் அதிகாரிகளால் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டன.
துப்பாக்கிகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே குடும்பிமலை வயல் வட்டானைத் தலைவரான 45 வயதுடைய நபர் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு விவசாயி உட்பட இருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் சிஐடி அதிகாரிகள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.








