தரக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரணாக அமைந்துள்ளதால் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய நிலக்கரி ஏற்றிய கப்பலொன்று, கொழும்புத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள இலங்கை கடல் எல்லையில் நங்கூரமிட்டுள்ளதாக ‘ஃப்ரீ லோயர்ஸ்’ (Free Lawyers) அமைப்பு தெரிவித்துள்ளது.
அவ்வமைப்பு விடுத்துள்ள விசேட அறிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி குறித்த நிலக்கரி கப்பலின் ஏற்றுமதி அறிக்கை பிரதிகள் (Shipping Documents), லங்கா நிலக்கரி நிறுவனத்தின் அனைத்து உயர் அதிகாரிகள் மற்றும் மின்சக்தி, வலுசக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் தரவுகளின்படி, குறித்த நிலக்கரி கப்பல் தென்னாப்பிரிக்காவின் ‘ரிச்சர்ட்ஸ் பே கோல் டெர்மினல்’ (Richards Bay Coal Terminal) துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதுடன், அதில் 59,766 மெட்ரிக் தொன் நிலக்கரி இருப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த நிலக்கரி இருப்பின் சாம்பல் சதவீதம் (Ash Percentage) 16.8 அலகுகளாகக் காணப்படுகிறது. இது லங்கா நிலக்கரி நிறுவனம் ஆரம்பத்தில் கோரியிருந்த உத்தியோகபூர்வ ஒப்பந்தப் பெறுமதியான 16 அலகுகளை விட மிக அதிகமாகும்.
இதன் காரணமாக, அபராதக் கொடுப்பனவுகளை (Penalty) விதித்தோ அல்லது வேறு எந்தவொரு மாற்று வழியிலோ அந்த நிலக்கரி இருப்பைக் கொள்வனவு செய்வதற்கு லங்கா நிலக்கரி நிறுவனத்திற்கு எந்தவிதமான சட்டரீதியான அதிகாரமும் இல்லை என ‘ஃப்ரீ லோயர்ஸ்’ அமைப்பு தனது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் பேராசிரியர் அனுர கருணாதிலக, “குறித்த நிலக்கரி இருப்பு ஆரம்ப ஒப்பந்தத் தரத்தை விடக் குறைவாக இருந்தபோதிலும், அதனை நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் (Lakvijaya Power Station) தடையற்ற மின் உற்பத்திக்காகப் பயன்படுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச ஒப்பந்த நடைமுறைகளின்படி, தரம் தொடர்பான இப்பிரச்சினை குறித்து ஏற்கனவே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், இக்கப்பல் விவகாரத்தை மையமாக வைத்துப் பல்வேறு அமைப்புகள் தங்களது சுயலாப அரசியல் தேவைகளுக்காகத் திட்டமிட்ட பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.








