மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு தேர்தல்களை நடத்த முடியாது என்ற டில்வினின் கூற்றினையும் அவர் நிராகரித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை குறித்து ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, இன்றைய அமைச்சரவை ஊடக சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
இருப்பினும், தேர்தலை நடத்துவதில் உள்ள முக்கியத் தடை நிதி தொடர்பானது அல்ல, சட்ட விதிகள் தொடர்பானது என்றும் அவர் கூறினார்.
சட்டப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஒரு பாராளுமன்றக் குழு தற்போது செயல்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேவையான சட்டக் கட்டமைப்பு அமைக்கப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
“இந்த அரசாங்கம் ஏற்கனவே எட்டு மாதங்களுக்குள் இரண்டு தேர்தல்களை நடத்தியுள்ளது.
அரசியலமைப்பின்படி மக்களின் இறையாண்மையைப் பாதுகாத்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் எதிர்பார்ப்பு,” என்றும் அவர் கூறினார்.
மேலும், அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்படாவிட்டாலும், தேவைப்பட்டால் ஒரு விசேட நிதிஒதுக்கம் மூலம் கூட தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்றும் அமைச்சர் ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
மாகாணசபை தேர்தலுக்கு நிதியில்லை-ஆனால் நிச்சயம் நடத்துவோம்!; NPP பிரபு








