இம்முறை இலங்கையிலிருந்து சுமார் 3500 ஹஜ் யாத்திரிகர்கள் மக்கா புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா சென்றுள்ள நிலையில், மினா கூடாரங்களில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
துல்ஹஜ் 8 ஆம் நாள் “யவ்முத் தர்வியஹ்” நிகழ்வை முன்னிட்டு யாத்திரிகர்கள் மக்காவில் இருந்து மினா மைதானத்திற்கு பயணித்தனர். அங்கு இலங்கை ஹஜ் முகவர்கள், சவூதி சேவை வழங்குநரான “அல்-ரிஹ்லாத் முதவ்விஃப்” ஊடாக ஒதுக்கப்பட்ட கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். எனினும் சுமார் 3000 யாத்திரிகர்களுக்கு வெறும் 38 குளியலறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், உணவிற்காக இரண்டு பஃபே நிலையங்கள் மட்டுமே இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உணவு பெறுதல், மலசலகூட பயன்பாடு, குளியல் மற்றும் வுழூ செய்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாத்திரிகர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அமைதியாக வழிபாடுகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் சேவைகளை வழங்கிய “அல்-பயாத்” முதவ்விஃப் நிறுவனத்தின் மூலம் இம்முறை சேவைகளைப் பெற முடியாமல் போனதுடன், இறுதி நேரத்தில் “அல்-ரிஹ்லாத்” நிறுவனத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டதே தற்போதைய நெருக்கடிக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இலங்கை யாத்திரிகர்கள் சார்பில் கட்டணங்கள் முன்கூட்டியே செலுத்தப்பட்டிருந்த போதிலும், சேவை வழங்குநரைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதம் திட்டமிடல் குறைபாடுகளை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நேற்று யாத்திரிகர்கள் அரஃபா மைதானம் நோக்கி பயணித்தனர். அதன் பின்னர் அவர்கள் முஸ்தலிஃபா பகுதியில் இரவு தங்கி, ஈதுல் அழ்ஹா தினத்தில் மீண்டும் மினா கூடாரங்களுக்கு திரும்பவுள்ளனர். தொடர்ந்து “ஷைத்தானுக்கு கல் எறிதல்”, “ஹத்யு குர்பானி”, “இஹ்ராம் களைதல்”, “தவாபுல் இபாழா” உள்ளிட்ட முக்கிய ஹஜ் கிரியைகள் நடைபெறவுள்ளதால் தற்போதைய வசதி குறைபாடுகள் மேலும் சிரமங்களை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும் யாத்திரிகர்கள் “ஐயாமுத் தஷ்ரீக்” எனப்படும் மூன்று நாட்கள் தொடர்ந்து மினாவில் தங்கியிருக்க வேண்டியிருப்பதும் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு, இலங்கை தூதரகம் – சவூதி அரேபியா மற்றும் ஜித்தா கொன்ஸல் ஜெனரல் அலுவலகம் ஆகியவை உடனடியாக சவூதி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடார வசதிகளை ஏற்பாடு செய்வது ஹஜ் முகவர்களின் பொறுப்பாகவும், பொதுவசதிகள் சவூதி ஹஜ் அமைச்சின் பொறுப்பாகவும் இருந்தாலும், அனைத்து யாத்திரிகர்களும் உரிய கட்டணங்களை செலுத்தியுள்ளதால் அவர்களது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு பொறுப்பான தரப்புகள் மீது விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட யாத்திரிகர்களுக்கு தேவையான நிவாரணம் மற்றும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.








