இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது வாழ்வாதார மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்குத் தேவையான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காகச் சென்னையில் இருந்து நேற்று புதன்கிழமை (27) காலை முதலமைச்சர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக டெல்லி சென்ற அவரை, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்துச் சிறப்பான முறையில் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, டெல்லி ஆயுதப் பொலிஸாரின் விசேட அணிவகுப்பு மரியாதையும் முதலமைச்சர் விஜய்க்கு அளிக்கப்பட்டது.
இதன் பின்னர், சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவருக்குப் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்துத் தனது மரியாதையைச் செலுத்தினார்.
தொடர்ந்து, இரு தலைவர்களும் தமிழ்நாடு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதரப்பு ஆலோசனைகளை மேற்கொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் பாரம்பரியக் கடல் எல்லையில் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பிரதமர் மோடியின் கவனத்திற்கு முதலமைச்சர் விஜய் கொண்டு சென்றார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சர்வதேசக் கடல் எல்லைத் தாண்டிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளது. நடப்பு 2026 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 12 கைது சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த 58 மீனவர்கள் தற்போது இலங்கையின் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்களின் வாழ்வாதாரமான சுமார் 266 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு, நாட்டுடைமையாக்கும் அபாயத்தில் உள்ளன.
எனவே, இந்த விவகாரத்தில் இந்திய மத்திய அரசு உடனடியாகத் தூதரக ரீதியாகத் தலையிட்டு, இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் எவ்விதத் தாமதமுமின்றி விடுவிப்பதற்கு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என இச்சந்திப்பில் தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமரிடம் மிகவும் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களால் தமிழக எல்லையோர மாவட்ட மீனவக் குடும்பங்கள் கடுமையான அச்சத்திலும், தொடர் வாழ்வாதார இழப்பிலும் தவித்து வரும் நிலையில், டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறு இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளமை அரசியல் மற்றும் தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.








