மட்டக்களப்பு நகரில் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திச் சென்ற நபர்கள், சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து அவரது தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
மயங்கிய நிலையில் காணப்பட்ட 62 வயதுடைய ஆட்டோ சாரதி, ரிதித்தென்னை காட்டு பகுதியில் இன்று (28) வியாழக்கிழமை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூநொச்சிமுனையைச் சேர்ந்த குறித்த சாரதி, நேற்று (27) பிற்பகல் தனது வீட்டிற்கு சென்று உணவருந்திய பின்னர் மீண்டும் ஆட்டோ தரிப்பிடத்திற்குச் சென்றுள்ளார். இரவு உணவிற்காக இடியாப்பம் வாங்கிக் கொண்டு இரவு 7 மணியளவில் வீடு திரும்புவதாக அவர் உறவினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், ஆட்டோ தரிப்பிடத்தில் இருந்து ஒருவர் வாழைச்சேனைக்கு செல்ல வேண்டுமெனக் கூறி ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திச் சென்றுள்ளார். ஆனால் இரவு 11 மணி ஆகியும் சாரதி வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

இதையடுத்து இன்று காலை, ரிதித்தென்னை காட்டு பகுதியை அண்மித்த இடத்தில் ஆட்டோ ஒன்றினுள் மயங்கிய நிலையில் ஒருவர் கிடப்பதை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், சாரதியை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யில் அனுமதித்தனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், சாரதிக்கு மயக்க மருந்து தெளித்த பின்னர் அவரது ஒரு பவுன் தங்க மோதிரம், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








