கொழும்பில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தையும் மகனும் கைது செய்யப்யுள்ளனர்.
பொது வீதி சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டிய சம்பவம் தொடர்பாக சட்டத்தை நடைமுறைப்படுத்த சென்ற பொலிஸ் அதிகாரிகளை மிரட்டியதற்காகவும், அவர்களின் பணியை தடுத்ததற்காகவும், தந்தை மற்றும் மகன் இருவரை மிரிஹானா தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எபித்தமுல்லாவில் உள்ள தமிழ்வத்த சந்திப்பு அருகே, 26ஆம் திகதியன்று நீல நிற லொரியில் வந்த ஒரு குழுவினர் வீதியோரத்தில் குப்பைகளை கொட்டுவதைக் காட்டும் காணொளிக் காட்சி ஒன்று, மிரிஹான தலைமையக தலைமை ஆய்வாளரின் உத்தியோகப்பூர்வ தொலைபேசிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செயல்பட்ட பொலிஸார் மோட்டார் போக்குவரத்து ஆணையரகம் மூலம் அந்த லொறியின் பதிவு விவரங்களை சரிபார்த்ததில், அந்த வாகனம் புறக்கோட்டை தலவத்துகொட வீதியை சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
அதற்கமைய, பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த லொறி நுவகொட, பெத்தகான பகுதியில் உள்ள கல்லூரியின் விளையாட்டு மைதானம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர், பொலிஸார் வாகனத்தின் முன்புறத்தில் காட்டப்பட்டிருந்த கையடக்க தொலைபேசி எண்ணிற்கு அழைத்து, ஓட்டுநரை சம்பவ இடத்திற்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அப்போது, பொலிஸார் அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி, லொறியுடன் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அவருக்குத் தெரிவித்தனர்.
எனினும், அந்த நேரத்தில், சந்தேகத்திற்குரிய ஓட்டுநர், பொலிஸாரை திட்டியும் மிரட்டியும் கைது செய்யப்படுவதை வன்மையாக எதிர்த்தார்.
அதே நேரத்தில் அவரது மகனும் சம்பவ இடத்திற்கு வந்து, தனது தந்தையின் கைது நடவடிக்கையைத் தடுக்கும் முயற்சியில், அதேபோல பொலிஸாரை திட்டியும் மிரட்டியும் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர், வலுக்கட்டாயமாக நடந்து கொண்ட தந்தையையும் மகனையும் பொலிஸார் கைது செய்து மிரிஹானா பொலிஸார் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான தந்தை மற்றும் மகன் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து மிரிஹானா தலைமையகக் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.








