சட்டவிரோதமாக நாட்டிற்குள் வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற 18 பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (30) அதிகாலை டுபாய் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகள் குழுவொன்று, சுங்கப் பரிசோதனைகளை தவிர்த்து பசுமை வழிப்பாதை ஊடாக வெளியேற முயன்றபோது சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 31.38 மில்லியன் ரூபாய் பெறுமதியான 209,200 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 1,046 பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 16 சீனப் பிரஜைகளும் இரண்டு இலங்கைப் பிரஜைகளும் அடங்குவதுடன், அவர்கள் வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்த 27 பயணப் பொதிகளை சோதனையிட்டபோதே இந்த சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








