நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளின் முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 130 ரூபாயாக உயர்த்தும் முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையை மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் விலைக்கட்டுப்பாட்டுக் குழுவிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் முதன்மைச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்தார்.
அண்மைய இரண்டு சந்தர்ப்பங்களில் பெட்ரோல் விலை மொத்தமாக 36 ரூபாயால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், கடந்த முறை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டண உயர்வை கோரவில்லை என்றாலும், இம்முறை ஏற்பட்டுள்ள கணிசமான விலை உயர்வால் பழைய கட்டண முறையில் சேவையை தொடர்வது சிரமமாக இருப்பதாக கூறினார்.
மேலும், எரிபொருளுக்கு அப்பால் கிரீஸ், இன்ஜின் ஆயில் உள்ளிட்ட வழுவூட்டிகள் மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தொழில்ச் செலவுகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், முச்சக்கர வண்டித் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.








