வெசாக் தின மின்வெட்டுக்கு அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – அசேல சம்பத்
வெசாக் பௌர்ணமி தினத்தில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை சம்பவம் தொடர்பில் மின்சாரத் துறை அமைச்சர் ஒட்டுமொத்த பௌத்த மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
தேசிய நுகர்வோர் முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பௌத்தர்களின் மிக முக்கியமான மத நிகழ்வான வெசாக் தினத்தில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டது பொறுப்பற்ற செயல் என குற்றஞ்சாட்டினார். சூரிய சக்தி உற்பத்தி உள்ளிட்ட மாற்று வசதிகள் இருந்தும் மின்தடை ஏற்பட்டமை அமைச்சின் இயலாமையை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
மேலும், சமீபத்திய எரிபொருள் விலை உயர்வையும் விமர்சித்த அவர், அரசாங்கம் முன்பு விலை அதிகரிக்கப்படாது என தெரிவித்த நிலையில் தற்போது விலை உயர்த்தியிருப்பது நுகர்வோரை ஏமாற்றும் செயலாகும் என்றார். இந்த விலை உயர்வு காரணமாக உணவுப் பொருட்களின் விலையும் போக்குவரத்து செலவுகளும் அதிகரித்து பொதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.
வெசாக் தினத்திற்கு முன்பாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தமை மற்றும் தட்டுப்பாடு நிலவியமை தொடர்பிலும் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விடயங்கள் குறித்து அரசாங்கம் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.








