டித்வா புயலால் பொது உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களை இதுவரை முழுமையாக சீரமைக்க முடியாமல் போனதற்கு அதிகாரிகளின் அலட்சியமும் செயல்திறனின்மையும் காரணம் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
சில இடங்களில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக இதுவரை முறையான மதிப்பீடுகள் கூட மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டித்வா புயலால் சேதமடைந்த உமா எல மகா நீர்ப்பாசனக் கால்வாயின் மறுசீரமைப்புப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், மஸ்பன்னே பேருந்து நிலையம் கடுமையாக சேதமடைந்த போதிலும், அதன் மறுசீரமைப்பு தொடர்பாக இதுவரை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதது கவலைக்குரியது என்றார்.

“மஸ்பன்னே பேருந்து நிலையத்தை ஏன் இன்னும் சீரமைக்கவில்லை, அதற்கான மதிப்பீடு ஏன் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அதிகாரிகளிடம் கேட்டபோது, யாரும் தெளிவான பதில் அளிக்கவில்லை. அந்தப் பேருந்து நிலையம் யாருக்குச் சொந்தமானது என்பது கூட சிலருக்கு தெரியாத நிலை இருந்தது” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த 24ஆம் திகதி ஹலாம்பே பாலத்தை பார்வையிட்டபோது, டித்வா புயல் மீட்பு திட்டத்தில் அந்தப் பாலம் சேர்க்கப்படாதது தெரியவந்ததாகவும், பாலத்தின் அணைக்கட்டு சேதமடைந்திருந்த போதிலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
டித்வா மீட்புத் திட்டத்தில் விடுபட்டுள்ள அனைத்து சேதங்களையும் உடனடியாக அடையாளம் கண்டு சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
500 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 168 பில்லியன் ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நிதியை இந்த ஆண்டுக்குள் பயன்படுத்தாவிட்டால் அதை மீண்டும் பெறுவது சிரமமாகும் என்றும் அவர் எச்சரித்தார்.
டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைவாக சீரமைத்து, நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர அரசியல் தரப்பும் அதிகாரிகளும் பொதுமக்களும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன வலியுறுத்தினார்.








