ஒலுவில் துறைமுகத் திட்டம் மற்றும் கல்முனை கடலரிப்பு பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது வரலாற்று உண்மைகளுக்கு முரணானது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஒலுவில் பகுதியில் துறைமுகம் அமைக்கும் யோசனையை அஷ்ரப் முன்வைத்திருந்தாலும், அதன் நடைமுறை சாத்தியக்கூறுகள், விஞ்ஞான அடிப்படை மற்றும் மக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அவர் இருந்ததாக ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்ட சாத்தியவள அறிக்கைகள் சாதகமாக அமையாத காரணத்தால், துறைமுகத்திற்கான அலைத்தடுப்பு அணை உள்ளிட்ட எந்த முக்கிய உட்கட்டமைப்பு பணிகளையும் அஷ்ரப் ஆரம்பிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கு பதிலாக, பிராந்திய இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக துறைமுக அதிகார சபையின் மஹாபொல தொழில்நுட்ப கல்லூரி, ஒலுவில் வெளிச்சவீடு மற்றும் தொடர்புடைய வசதிகளை உருவாக்கும் பணிகளையே முன்னெடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், அஷ்ரப் உயிருடன் இருந்த காலத்தில் ஒலுவில் துறைமுகத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த ஆரம்ப நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வரலாற்று உண்மை எனவும் ஹரீஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒலுவில் துறைமுகத் திட்டம் உண்மையில் 2008ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தற்போது காணப்படும் கடலரிப்பு பிரச்சினைகளுக்கான பொறுப்பை மறைந்த தலைவர் அஷ்ரப் மீது சுமத்துவது நியாயமற்றதுடன், வரலாற்றைத் திரிக்கும் முயற்சியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கடந்த காலங்களில் அஷ்ரப்பின் அரசியல் பங்களிப்புகள் மற்றும் சமூக சேவைகளை அநுரகுமார திஸாநாயக்க பல சந்தர்ப்பங்களில் பாராட்டியிருந்ததை நினைவூட்டிய ஹரீஸ், அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தலைவராக அஷ்ரப்பை குறிப்பிடும் ஹரீஸ், அவர் தொடர்பாக முன்வைக்கப்படும் தவறான கருத்துக்களை தெளிவுபடுத்துவது அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும் பொறுப்பாகும் என வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக ரஊப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியை சந்தித்து உண்மை நிலையை எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.








