மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 வயதுடைய தனது மகளிடம் தொடர்ந்து ஆபாசமான முறையில் பேசியதாகக் கூறப்படும் 60 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இளம் பெண், தனது தந்தை நீண்டகாலமாக தன்னிடம் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி வந்ததாகக் குறிப்பிட்டு, பொலிஸ் மா அதிபருக்கு இணையம் ஊடாக முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
அந்த முறைப்பாடு தொடர்புடைய பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், மதுபான விற்பனை நிலையமொன்றில் பணியாற்றி வந்த சந்தேகநபரை நேற்று (01) இரவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்திய பின்னர் கைது செய்தனர்.

தனது தந்தையின் தொடர்ச்சியான ஆபாசப் பேச்சுகளால் அவருடன் வசிப்பது சிரமமாக உள்ளதாக முறைப்பாட்டில் குறித்த இளம் பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதித்தபோது, அதில் அதிகளவிலான ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








