மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்களின் தந்தையை, எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 27ஆம் திகதி, மட்டக்களப்பு – திருகோணமலை வீதியிலுள்ள விடுதியின் அறையொன்றில் தங்கியிருந்த இரண்டு குழந்தைகள், கட்டில் மெத்தை தீப்பற்றி எரிந்ததன் காரணமாக மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பரவலான கவனத்தை ஈர்த்தது.
ஆரம்பக் கட்ட தகவல்களில், குழந்தைகளின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த தகவல் உண்மையல்ல என்பதும், குழந்தைகளின் தந்தை போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பிள்ளைகளை வைத்துப் பிச்சையெடுத்து மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, உயிரிழந்த குழந்தைகளின் தந்தையான அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த மே 28ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், முதற்கட்டமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குழந்தைகளின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதற்காக அவரை சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், அவருக்காக பிணை வழங்க எவரும் முன்வராத காரணத்தால், அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், உயிரிழந்த இரு குழந்தைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யப்படவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதேவேளை, பெற்றோர் 2020ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஆவணங்களில் காணப்படுவதுடன், அவர்களது மூத்த குழந்தையின் வயது எட்டு என குறிப்பிடப்பட்டுள்ளமை விசாரணை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், குறித்த மூன்று குழந்தைகளும் உண்மையில் அவர்களது பிள்ளைகள்தானா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபருக்கு நீர்கொழும்பைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்புகள் இருந்திருக்கலாம் என்ற தகவல்களும் புலனாய்வுப் பிரிவினரால் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இவ்விடயம் தொடர்பான விசாரணைகள் இன்னும் தொடர்கின்றன.








