இலங்கையின் எரிபொருள் சந்தையில் செயல்பட்டு வரும் லங்கா ஐஓசி (Lanka IOC), சினோபெக் (Sinopec) மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks) ஆகிய தனியார் எரிபொருள் நிறுவனங்கள், தற்போதைய விலை நிர்ணயத்தின் கீழ் செயல்படுவதால் பாரிய நட்டம் ஏற்படுவதாகக் கூறி, எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
தற்போதைய விலைகளின் அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது சிரமமாக உள்ளதுடன், ஏற்படும் நட்டத்தை தொடர்ந்து தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனினும், தனியார் நிறுவனங்களின் இந்த கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் இதுவரை இறுதியான எந்தத் தீர்மானத்தையும் அறிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக்க, எரிபொருள் விற்பனையில் ஏற்படும் செயல்பாட்டு நட்டத்தை மேலும் சுமக்க முடியாத காரணத்தால், விலை திருத்தம் அவசியம் என தனியார் நிறுவனங்கள் அமைச்சிடம் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை, எரிபொருள் விலை தொடர்பான இறுதி முடிவு அரசாங்கத்தின் பரிசீலனையின் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








