2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் எரிபொருள் நுகர்வு குறைவடைந்துள்ள போதிலும், உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (02) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், உலக சந்தை விலை மாற்றங்களின் தாக்கத்தால் எரிபொருள் இறக்குமதிக்கான அரச செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் கூறினார்.
அவரின் விளக்கத்தின்படி, ஜனவரி மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக 186 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்ட நிலையில், மே மாதத்தில் அந்தச் செலவு 521 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
எரிபொருள் நுகர்வு தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஓட்டோ டீசல் பயன்பாடு ஜனவரியில் 4,538 கிலோ லீற்றராக இருந்த நிலையில், மே மாதத்தில் 3,701 கிலோ லீற்றராக குறைந்துள்ளதாக குறிப்பிட்டார். அதேவேளை, மொத்த டீசல் பயன்பாடு ஜனவரியில் 5,944 கிலோ லீற்றராகவும், மே மாதத்தில் 5,394 கிலோ லீற்றராகவும் பதிவாகியுள்ளது.
மேலும், 92 ஒக்டேன் பெற்றோல் பயன்பாடு ஜனவரியில் 5,565 கிலோ லீற்றராக இருந்த நிலையில், மே மாதத்தில் 4,849 கிலோ லீற்றராகக் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நுகர்வு அளவுகள் 80 முதல் 90 சதவீத வரையிலான மட்டத்தில் காணப்பட்ட போதிலும், உலக சந்தை விலை உயர்வின் காரணமாக இறக்குமதிச் செலவு 186 மில்லியன் டொலரிலிருந்து 521 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உலக சந்தையின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப உள்நாட்டு எரிபொருள் விலைகளை சமநிலைப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.








