மைதானம் இல்லாமலேயே மாவட்ட மட்ட கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் செங்கலடி பசுந்தளிர் விளையாட்டு கழகம், எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய விளையாட்டு அடையாளமாக மாறும் என சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
செங்கலடி பசுந்தளிர் விளையாட்டு கழகம் நடாத்திய RPL (ரமேஸ்புரம் பிரிமியர் லீக்) போட்டிகளுக்கான வீரர் ஏலம் மற்றும் சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், உலகளாவிய ரீதியில் இந்தியாவின் IPL போன்ற லீக் போட்டிகளின் தாக்கத்தால் பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வருவதாகவும், அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் விளையாட்டு கழகங்கள் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பங்களித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மைதானம் இல்லாமல் ஒரு சிறிய தனியார் காணியில் பயிற்சிகளை மேற்கொண்டபடியே மென் பந்து மற்றும் வன் பந்து கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் செங்கலடி பசுந்தளிர் விளையாட்டு கழகம், பாராட்டுக்குரிய சாதனையை நிலைநிறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக RPL போட்டிகளை சிறப்பாக நடத்தி வரும் கழகத்தின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை எனவும், போட்டிக்கான கிண்ண வடிவமைப்பு மற்றும் வீரர் ஏலம் போன்ற ஏற்பாடுகள் சிறப்பாக அமைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஏறாவூர் பற்று பிரதேசத்திற்கு இதுவரை ஒரு பொதுவிளையாட்டு மைதானம் இல்லாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊடாக மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
தளவாய், புன்னைக்குட் பகுதிகளில் உள்ள அரச காணிகளை அடையாளம் கண்டு, பிரதேச அபிவிருத்தி குழு மற்றும் விளையாட்டு அமைச்சின் ஊடாக மைதானம் அமைக்கும் திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு மைதானம் அமைக்கப்பட்டால், செங்கலடி பசுந்தளிர் விளையாட்டு கழகம் அங்கு பயிற்சி மற்றும் போட்டிகளை ஒருங்கிணைக்கும் முக்கிய கழகமாக செயல்பட வாய்ப்பு உள்ளதாகவும், தேவையான வசதிகள் கிடைத்தால் அந்த கழகம் மாவட்ட மட்ட கிரிக்கெட்டில் இன்னும் பெரிய சாதனைகளை அடையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
















