குருணாகல் தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘களனி குமாரி’ எனப் பிரபலமாக அழைக்கப்படும் தொடருந்து, ஓட்டுநர் எவரும் இல்லாத நிலையில் தானாகவே முன்னோக்கி நகர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 28ஆம் திகதி இரவு 9.30 மணி முதல் 10.00 மணிக்கிடையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தொடருந்தின் பிரேக் செயலிழந்ததாலோ அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ அது கட்டுப்பாடின்றி நகர்ந்திருக்கலாம் என ஆரம்பக்கட்டமாக சந்தேகிக்கப்படுகிறது.

கட்டுப்பாடின்றி நகர்ந்த தொடருந்து சுமார் 100 மீட்டர் தூரம் சென்ற பின்னரே அதிகாரிகளால் கவனிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தொடருந்து நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதனை நிறுத்த முயன்ற போதிலும், அது வெற்றியளிக்கவில்லை.
பின்னர், தொடருந்து குருணாகல் நிலையத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள நைலிய தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள மேடான பகுதியில் ஏறி தானாகவே நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ‘மீனகயா’ அதிவேக தொடருந்து, பொத்துஹெர பகுதியில் நிறுத்தப்பட்டு பின்னர் குருணாகல் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.
நிலைமையை உணர்ந்த பொத்துஹெர மற்றும் குருணாகல் நிலைய அதிகாரிகள் உடனடியாக ஒருங்கிணைந்து மீனகயா தொடருந்தின் ஓட்டுநரை தொடர்புகொண்டு எச்சரித்துள்ளனர். அதன்படி, ஓட்டுநர் உடனடியாக செயல்பட்டு களனி குமாரி தொடருந்துக்கு மிக அருகில் வந்த மீனகயா தொடருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தொடருந்து திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கையால் இயக்கப்படும் பிரேக் பயன்படுத்தப்படவில்லையா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.








