ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் நெமோட்டோ யுகினோரி ஆகியோருக்கிடையிலான விசேட கொள்கை ரீதியிலான கலந்துரையாடல் நேற்று (02) டோக்கியோ நகரில் நடைபெற்றது.
இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான கடற்றொழில், நீரியல் வளர்ப்பு மற்றும் கடல்வள முகாமைத்துவத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்தது.
இதன்போது, இலங்கையின் கடல் உணவுப் பெறுமதி சங்கிலியை மேம்படுத்துதல், ஜப்பானிடமிருந்து நவீன தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்ப அறிவு ஆதரவுகளைப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், ஜப்பானிய சந்தையில் இலங்கை கடல் உணவுப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பின் முக்கிய அம்சமாக, இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மீன்வளம், கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பீடங்களில் பட்டம் பெறும் இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானின் மீன்பிடி தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்க ஜப்பானிய தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பு திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை மற்றும் இலங்கைத் தூதரகம் ஊடாக ஒருங்கிணைத்து விரைவாக நடைமுறைப்படுத்த இரு தரப்பினரும் தீர்மானித்துள்ளனர்.
இலங்கையின் கடற்றொழில் துறையை நவீன தொழில்நுட்பங்களுடன் உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கு ஜப்பானிய அரசாங்கம் வழங்கும் ஆதரவு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பிவித்துரு ஜனக குமாரசிங்க மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் பி. கே. கோலித கமல் ஜினதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.








