மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனைப் பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குறித்த நபர் நேற்று மாலை (03) காணி ஒன்றில் மரத்தின் மீது ஏறி மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மரத்திலிருந்து கால் வழுக்கி கீழே விழுந்த அவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பாலமுனை மற்றும் ஆரையம்பதி பிரதேச மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.









