அங்குருவாதொட – பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக மூவர் காணாமல் போயிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த 7 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் மையத்தில் இருந்த சுமார் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
‘மவ்பிய செவன செநெஹஸே கெடெல்ல’ எனப்படும் இந்த முதியோர் பராமரிப்பு நிலையத்தில் நேற்று (03) பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், அந்த கட்டிடம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
விபத்து நேரத்தில் அந்த இல்லத்தில் சுமார் 72 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் சிலர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று (04) காலை இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்னர் சடலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விசாரணைகளை முன்னெடுக்க மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.








