இலங்கையில் ஐந்தில் ஒரு பாடசாலை மாணவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் உடல் பருமன் போன்ற சுகாதார சிக்கல்களுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
அண்மைய கணக்கெடுப்பு தரவுகளை மேற்கோள் காட்டிய அவர், ஐந்து வயதுக்குட்பட்ட மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளில் வளர்ச்சி குன்றல் 10.1% ஆகவும், எடை குறைவு 16.1% ஆகவும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். அதேவேளை, அதிக எடை அளவு 0.5% ஆக குறைவாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெரியவர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய நிலவரப்படி உடல் பருமன் 47% பெண்களையும் 30% ஆண்களையும் பாதித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இது முறையே 15% மற்றும் 6% ஆக மாறக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.








