பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ஒருதலைப்பட்சமாக அமுல்படுத்தப்படுவது தற்போதைய அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் கலைஞர் ஒருவர், ராப் பாடலில் விடுதலைப் புலிகள் தொடர்பான உள்ளடக்கத்தை பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இசை மற்றும் கலை வெளிப்பாடுகள் பயங்கரவாத குற்றங்களாகக் கருதப்படுகின்றன என்றால், அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களின் போது விடுதலைப் புலிகள் தொடர்பான பாடல்களை பயன்படுத்திய அரசியல்வாதிகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது சமூக ஊடகப் பதிவில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த அரசாங்க உறுப்பினர் ஒருவர் அரசியல் நோக்கத்திற்காக இதுபோன்ற பாடல்களை வெளிப்படையாக பகிர்ந்ததாகவும், அப்போது சட்ட அமுலாக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாக தொடர்ந்தும் சட்டத்தின் கீழ் காணப்படுகின்ற போதிலும், அதனை மகிமைப்படுத்தும் எந்தச் செயலையும் தாம் ஆதரிப்பதில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும், ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இருவரில் ஒருவர் அரசியல் பாதுகாப்பைப் பெற, மற்றொருவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு ஒரு விதியும் சாதாரண இளைஞர்களுக்கு மற்றொரு விதியும் நடைமுறையில் இருப்பது ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானது எனத் தெரிவித்துள்ள அவர், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இல்லையெனில், இந்தக் கைது ஒருதலைபட்சமான அதிகார துஷ்பிரயோகமாகக் கருதப்படும் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.








