பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினார்.
அங்கு கருத்து தெரிவித்த அவர், மே 18 ஆம் திகதி நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை எனக் குறிப்பிட்டிருந்ததை வரவேற்றார். சகோதர மொழி பேசும் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், இராயப்பு ஜோசப் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் 146,000 பேர் உயிரிழந்த மற்றும் காணாமல் போன விவகாரம் தொடர்பாக துணிச்சலான அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மால்கம் ரஞ்சித், தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் குறித்து இதுவரை பேசவில்லை என்றும் அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்த அவர், ஆட்சி மாறினாலும் முன்னாள் ஆட்சிகளில் காணப்பட்ட நிலைமையே தொடர்வதாக குற்றஞ்சாட்டினார். விடுதலைப்புலிகளை மீளுருவாக்கும் நோக்கில் பாடல் பாடியதாக குற்றம்சாட்டப்பட்டு கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு 16 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கருத்துச் சுதந்திரம் மற்றும் வெளிப்பாட்டு உரிமைகள் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம் தனது பதவி விலகல் கடிதத்தை தனக்கும் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நீண்டகாலமாக கட்சிக்காக எந்தப் பதவியையும் எதிர்பார்க்காமல் பணியாற்றியவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை ஒரு ஆண்டுக் காலத்திற்கு அவருக்கு வழங்க வேண்டும் என அரசியல் குழுவில் தாம் முன்மொழிந்திருந்ததாகவும், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உள்கட்டமைப்பின் ஊடாகவே தீர்க்க முயற்சிப்போம் என்றும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.








