பொழுதுபோக்கு நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான பாடல்களைப் பாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பரவி வரும் தவறான தகவல்கள் தொடர்பில் பொலிஸார் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளனர்.
கடந்த மே 31 ஆம் திகதி சாவகச்சேரி நவக்குளியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது பாடப்பட்ட இரண்டு பாடல்களை திருத்தி, விடுதலைப்புலிகளைப் போற்றும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சி உதயநகரைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் ஜூன் 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் விசாரணைகளில், குறித்த காணொளிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவான உள்ளடக்கத்துடன் மாற்றியமைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபர் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 3(G) பிரிவின் கீழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, ஜூன் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இசை நிகழ்ச்சிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் தவறானவை என்றும், பொதுமக்கள் சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும் இலங்கை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், அனைத்து குடிமக்களும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைவாகச் செயல்பட வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.








