காதலிப்பதாகக் கூறி 16 வயதுடைய சிறுமியை நள்ளிரவில் வேனில் கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய முதன்மைச் சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை, கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு இக்கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாதிக்கப்பட்ட 16 வயதுடைய சிறுமி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது தாயாருடன் கல்முனை மாநகரப் பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு பணியாற்றிய 25 வயதுடைய இளைஞனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டு தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை இரவு 11:30 மணியளவில், காதலனான அந்த இளைஞன் வாடகைக்கு எடுத்த வேன் ஒன்றில், தான் பணிபுரியும் கடையில் வேலை செய்யும் மற்றொரு 56 வயதுடைய நபருடன் சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த சிறுமியைத் தொலைபேசியில் அழைத்து, பலவந்தமாக வேனில் ஏற்றி அம்பாறை மாவட்டத்தின் மத்திய முகாம் பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளனர்.
அங்குள்ள பாழடைந்த வர்த்தகக் கட்டடம் ஒன்றிற்குச் சிறுமியைக் கொண்டு சென்று, இருவரும் கூட்டுத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். பின்னர் சிறுமியை அக்கரைப்பற்று பகுதியில் இறக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி அப்பகுதியால் வந்த பேருந்து ஒன்றின் உதவியுடன் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்து முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், 25 வயதுடைய முதன்மைச் சந்தேகநபரைக் கைது செய்ததுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேனையும் கைப்பற்றினர். நேற்று வெள்ளிக்கிழமை (05.06.2026) சந்தேகநபரை கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காகக் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் காரணமாக அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், கடுமையான மன அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தந்தை மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய, தற்போது தலைமறைவாகியுள்ள இரண்டு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய மற்றைய சந்தேகநபரை கல்முனைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.








