புலத்சிங்கள பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5 உறுப்பினர்களை அவர்களது பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இவ்வாறு உறுப்பினர் பதவிகளை இழந்தவர்கள், அந்தப் பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய ஐமச குழுவின் தலைவர் நிஹால் மெந்திஸ், மொஹமட் நிஷார்ட், காந்தி பெலவத்த, ஆயிஷா சாமலி மற்றும் புஷ்பா சமரசிங்க ஆகியோராவர்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், பிரதேச சபையின் ஆட்சியை அமைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து, இந்த உறுப்பினர்கள் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய ஆதாரத்தை அப்பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சமர்ப்பித்ததை அடுத்து, கட்சியின் செயற்குழு இந்த உறுப்பினர்களை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கட்சியிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான, தான் இது குறித்து கட்சிக்கு தொடர்ச்சியாக முறைப்பாடு செய்ததாகவும், குறித்த உறுப்பினர்கள் கட்சியின் முடிவுக்கு முரணாக தொடர்ந்து செயற்பட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.








