இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த சாசனத்தைப் பாதுகாத்து அதனைப் போஷிப்பது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும் என சிங்கள ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ராவய அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் பௌத்த சாசனத்திற்கும் பிக்கு சமூகத்திற்கும் எதிரான கருத்துக்கள் திட்டமிட்ட வகையில் பரப்பப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
மகா சங்கத்தினரிடையே இடம்பெறும் தனிப்பட்ட சில சம்பவங்களை முன்னிறுத்தி முழு பிக்கு சமூகத்தையும் அவமதிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட அவர், இது பௌத்த சாசனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகக் காணப்படுவதாக தெரிவித்தார்.
பல்லேகம தேரர் தொடர்பான விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், அதனை காரணமாகக் கொண்டு அனைத்து பிக்குகளையும் இழிவுபடுத்தும் சமூக ஊடகப் பிரசாரங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கம் தனது அரசியலமைப்பு பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும், மத வெறுப்பைத் தூண்டும் மற்றும் பிக்கு சமூகத்தை இலக்காகக் கொண்ட சமூக ஊடகப் பக்கங்கள் மீது சட்டரீதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.








