மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 34வது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழு ஒன்றினால் மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவருடைய சமாதியானது புனித மரியால் பேராலயத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதில் நினைவேந்தலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பல்சமயங்களின் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முத்த அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார், அருட்தந்தை இன்னாசியஸ், சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன், ரி.வசந்தராசா, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் டாக்டர் கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் உறுப்பினர்கள், அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் உறவினர்கள் ,களசிவில் சமூக பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.





இதன்போது சமாதியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலிகள் செலுத்தப்பட்டதுடன், அஞ்சலி உரைகளும் நடைபெற்றுள்ளன.
“தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்த காலத்தில், ஆக்கிரமிப்புப் படையினரால் மக்கள் அழிக்கப்பட்டார்கள், சுற்றிவளைப்புக்கள், கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு மக்களின் துன்ப துயரங்களிற்கு துணிந்து களமிறங்கி குரல்கொடுத்துவந்தார்.
அருட்தந்தை சந்திரா பெர்ணாண்டோ தமிழ் தேசிய விடுதலையை உள்ளுணர்வோடு நேசித்ததனால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக் கொண்டவராக காணப்பட்டார். இதனால் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பு பலம்பொருந்தியதாகவும், அனைத்து விடயங்களிலும் தகமைசார் செயற்பாட்டாளர்களை கொண்டிருந்ததற்கும் வணபிதா சந்திரா, அதிபர் வணசிங்க போன்ற தன்னலமற்ற உன்னத மனிதர்களின் செயற்பாடுகளே காரணமென போற்றப்படுகின்றது.”





















