மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற தமிழ் பிரதிநிதிகள், பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு அஞ்சி ஒடுங்கி, அவற்றின் விசுவாசிகளாக மாறியிருப்பது கவலையளிப்பதாக வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டு ஏற்பாட்டுக்குழு இணைப்பாளர் அருட்தந்தை க. ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டின் பாடல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய அவர், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பிரதிநிதிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஓடி ஒளியும் நிலை உருவாகியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
வட்டுக்கோட்டைப் பிரகடனம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் வரலாற்றுத் தாயகக் கோரிக்கையின் அடையாளம் எனக் குறிப்பிட்ட அவர், அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டில் வடக்கு–கிழக்கு தமிழ் மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்களது அரசியல் உரிமைக் குரலை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
















