பாடசாலை மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில், அரசியல் கட்சி ஒன்றின் அமைப்பாளரும், அரணாயக்க பிரதேச சபை உறுப்பினருமான சந்தேகநபர் ஒருவர் நேற்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவனல்லை, கணேதென்ன, ஹிங்குல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி ஒருவர் மாவனல்லை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின்படி, சந்தேகநபர் ஹெம்மாத்தகம – மாவனல்லை வீதியில் தேவனகல பிரதேசத்தில் உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவ மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
மாணவியின் கிரக தோஷம் அல்லது தீய சக்திகளை நீக்குவதற்காக பரிகாரப் பூஜை செய்வதாகக் கூறி இந்த துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இந்த மாணவிக்கு நேர்ந்த இச்சம்பவம் குறித்து மாவனல்லை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.








