ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா கைவிட்டதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று மீண்டும் குறைவடைந்துள்ளன.
நேற்று அமெரிக்க டொலர் 90 எல்லையைத் தாண்டி உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை, புதிய அரசியல் சூழ்நிலையால் இன்று மீண்டும் அந்த மட்டத்திற்குக் கீழ் சரிந்துள்ளது.
இன்றைய சந்தை நிலவரப்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 89.33 அமெரிக்க டொலராகவும், மர்பன் கச்சா எண்ணெய் 87.25 அமெரிக்க டொலராகவும் விற்பனையாகியுள்ளது. அதேவேளை, அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 86.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்திருந்தது. இதன் எதிரொலியாக, உலக எரிசக்தி போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஈரான் எடுத்த நடவடிக்கைகள் சந்தையில் அச்சத்தை ஏற்படுத்தின.
இந்த புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக, நேற்று கச்சா எண்ணெய் விலைகள் வேகமாக உயர்ந்திருந்தன. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 2.47 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 95.40 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெய் 2.89 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 92.63 அமெரிக்க டொலராகவும் அதிகபட்ச விலையை எட்டியிருந்தது.
எனினும், அமெரிக்கா தனது தாக்குதல் திட்டங்களை நிறுத்தியதன் மூலம் ஏற்பட்ட நெருக்கடி தளர்வு, சர்வதேச எண்ணெய் சந்தையில் மீண்டும் விலைச் சரிவை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.








