விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் கணேச்குமாரை பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட சங்கீத்சன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவரது கைது சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்நிலையில், இன்று வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், சங்கீத்சனுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரிவுகளை முழுமையாக நீக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, PTA சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட நடவடிக்கைகளை கைவிட்டு, தேவையானால் தண்டனைச் சட்டக் கோவை (Penal Code) பிரிவுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமா அதிபரின் இந்த தீர்மானம் இன்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் சங்கீத்சனுக்கு எதிரான PTA குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சங்கீத்சனின் கைது மற்றும் தடுப்புக் காவல் தொடர்பாக மனித உரிமை அமைப்புகள், சிவில் சமூக பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், இன்றைய நீதிமன்ற நடவடிக்கையும் சட்டமா அதிபரின் பணிப்புரையும் வழக்கில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.








