மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உருவாக்கப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வரைவு தொடர்பாக இருதரப்பும் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
தனது ‘X’ சமூக ஊடகப் பதிவின் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ள அவர், ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக பாகிஸ்தான் இரு நாடுகளுடனும் நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்ற நிலையைத் தணிக்கும் முயற்சிகளில் முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டு வந்த பாகிஸ்தான், அமைதி முயற்சிகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
“அமைதி இதற்கு முன்னர் எப்போதும் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை” என ஷெபாஸ் ஷெரீப் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், ஒப்பந்தத்தின் முழுமையான அம்சங்கள் மற்றும் அது எப்போது உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்படும் என்பது தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.








