கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தினசரி சட்டத்தரணி உதவி வழங்கும் கோரிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நிராகரித்துள்ளது.
சலேவின் மனைவி மனோரி சலே முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர இதனை எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வாரத்தில் ஐந்து நாட்கள் சலே தனது சட்டத்தரணி அசித் சிறிவர்தனவை சந்திக்க அனுமதி வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. எனினும், தற்போது சுரேஷ் சலே மருத்துவ சிகிச்சையில் இருப்பதாலும், விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபடாத நிலையிலும் இருப்பதாலும் தொடர்ச்சியான சட்ட ஆலோசனை அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடிக்கடி சட்டத்தரணியை சந்திப்பது நோயாளியின் ஓய்வு மற்றும் உடல்நல மீட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு புதன்கிழமையும் மட்டும் சட்டத்தரணி சலேவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலான சந்திப்புகளுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தினசரி அவரை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தடுப்புக் காவலில் இருந்தபோது ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தையடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சுரேஷ் சலே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.








