வேலணை பகுதியில் நீண்டகாலமாக செயற்பட்டு வந்ததாகக் கூறப்படும் மாட்டுத் திருட்டுக் கும்பலுடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்றுறை பொலிஸாரின் தகவலின்படி, வேலணை, புங்குடுதீவு மற்றும் அல்லைப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் பண்ணையாளர்களின் கறவை மாடுகள் மற்றும் வீடுகளை உடைத்து நகைகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்கள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக இவர்கள் தேடப்பட்டு வந்துள்ளனர்.
இதற்கமைய, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மெலிஞ்சிமுனை மற்றும் பருத்தியடைப்பு பகுதிகளில் கடந்த 13 ஆம் தேதி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், குறித்த திருட்டுக் கும்பலின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் கஜவதன் என்பவர் வேலணை வங்களாவடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் மேலும் நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், மொத்தமாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சந்தேகநபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.








