மட்டக்களப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி. சந்திரகாந்தன் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் ஆகியோர் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15) குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் இவர்களை ஆஜர்படுத்தியபோது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிள்ளையான் கடந்த 2025 ஏப்ரல் 7ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பிள்ளையானின் வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில், 2006ஆம் ஆண்டு கல்லடி பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, கப்பம் கோரப்பட்ட பணத்தை வழங்க மறுத்த வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை, கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் பிள்ளையானின் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் 2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகத்தின் அப்போதைய உபவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை உள்ளடக்கிய விசேட அறிக்கை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிள்ளையானின் பாதுகாப்பு காரணங்களால் அவரை நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக CID அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர். இதனையடுத்து பிள்ளையான் இணையவழி (Zoom) ஊடாக நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்றார்.
மேலும், சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒருவரின் மரணம் மற்றும் மற்றொருவர் வெளிநாட்டில் இருப்பது குறித்தும் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிள்ளையான் உட்பட மூவரையும் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, பிள்ளையான் மற்றும் அவரது குழுவினருக்கு எதிரான வழக்குத் தகவல்கள் ஏற்கனவே கல்கிசை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது வேறு வழக்கொன்றிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், பிள்ளையானின் நெருங்கிய ஆதரவாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இனியபாரதி என அழைக்கப்படும் கே. புஷ்பகுமார் மீது ஏழு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 2022ஆம் ஆண்டு அக்கரைப்பற்று நீதிமன்ற ஆவணக் காப்பகத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும், குற்றவியல் வழக்குகளின் சான்றுகளை அழிக்கும் நோக்கில் இந்தச் செயல் இடம்பெற்றதாகக் கூறி இனியபாரதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிள்ளையானை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். நீதிமன்றத்துக்குள் நுழைந்த பொதுமக்கள் கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.








