சர்வதேச லயன்ஸ் கழகங்களின் 306டி 10 மாவட்டத்தின் கீழ், “மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின்” பெருமைமிகு ஏற்பாட்டில், ‘மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகம் – மனிதநேயத்திற்காக’ என்ற புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாசிக்குடாவில் அமைந்துள்ள பிரபல அமயா ஹோட்டலில் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு முதன்மை விருந்தினராக லயன்ஸ் மாவட்ட ஆளுநர் லயன் கே. லோகேந்திரன் PMJF, PMAF அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருடன் இணைந்து மாவட்டத்தின் முதல் பெண்மணி லயன் லோஜிதா லோகேந்திரன் MJF அவர்களும் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தனர்.
“மனிதநேயத்திற்காக” என்ற உன்னத மகுடவாசகத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய கழகத்தின் அறிமுக விழாவில், புதிய உறுப்பினர்கள் மாவட்ட ஆளுநரால் உத்தியோகபூர்வமாக கழகத்தினுள் இணைத்துக் கொள்ளப்பட்டதுடன், புதிய நிருவாகிகளுக்கான பதவியேற்பு சத்தியப்பிரமாணமும் நடைபெற்றது.
இதன்போது புதிய இந்த மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகம் – மனிதநேயத்திற்காக என்னும் கழகத்தின் தலைவராக ஞானசேகரம் நவீகரன் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர் வரவேற்கப்பட்டு அவருக்கான பதவி நிலையும் ஆளுனரினால் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது இப்புதிய கழகத்தின் இலச்சினையானது “பன்முகத்தன்மையில் வலிமை, ஒற்றுமையில் சேவை, “ஒன்றாக நாம் சேவை செய்வோம், ஒன்றாக நாம் மாற்றத்தினை ஏற்படுத்துவோம்” ஆகிய உயரிய கோட்பாடுகளைத் தாங்கி, மனிதநேயத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அது வெளியிட்டும் வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்தியத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பல்வேறு சமூக நலத்திட்டங்களை இப்புதிய கழகம் இனிவரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ளதாக விழாவின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இவ்விழாவில் லயன்ஸ் கழகத்தின் உயர் அதிகாரிகள், மாவட்ட நிருவாகிகள், “மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் நிறைவில் புதிய சங்கத்தின் நிருவாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.








