பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘சிசு செரிய’ விசேட பஸ் சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று (15) வவுனியா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் மாணவர்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான ம. ஜெகதீஸ்வரன் மற்றும் செ. திலகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
நிகழ்வில் கருத்து தெரிவித்த பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன், மாணவர்களின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணத்தை உறுதிப்படுத்துவதே இந்த சேவையின் பிரதான நோக்கம் என தெரிவித்தார்.
மேலும், மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு தற்போது வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘சிசு செரிய’ சேவை, எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும், அதற்கான திட்டமிடல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதோடு, பெற்றோரின் போக்குவரத்துச் சுமையைக் குறைக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் வடக்கு மாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








