இந்த ஆண்டுக்குள் 120,000க்கும் மேற்பட்டோருக்கு அரச சேவையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அரச சேவையை வலுப்படுத்தாமல் நாட்டை கட்டியெழுப்பும் இலக்குகளை அடைய முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்க நிறுவனங்களும் பாடசாலைகளும் மனிதவள பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், அதற்கான தீர்வாக புதிய ஆட்சேர்ப்புகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அரச ஊழியர்கள் கண்ணியத்துடனும் பொருளாதார பாதுகாப்புடனும் வாழ்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரச சேவையில் இணையும் ஊழியர்கள் பணியில் சேர்ந்த நாளில் உணர்ந்த உற்சாகத்துடனும் திருப்தியுடனும் ஓய்வுபெறும் சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் கூறினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை தொழில்நுட்ப சேவையின் மூன்றாம் தர தொழில்நுட்ப அதிகாரி பதவிகளுக்கான 133 நியமனக் கடிதங்கள், கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் சந்தன அபேரத்னவினால் வழங்கிவைக்கப்பட்டன.








