வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட சுமார் தங்கப் பொருட்களின் எடையிடல் பணிகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இன்று (16) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் CID இந்த தகவலை சமர்ப்பித்தது.
குறித்த தங்கப் பொருட்கள் தற்போது இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 161 இலட்சம் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தங்கப் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த காரணத்தால் அவற்றின் எடையிடல் மற்றும் ஆரம்ப பரிசோதனை நடவடிக்கைகள் நிறைவடைய சுமார் ஒரு வருட காலம் எடுத்ததாக CID நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தங்கப் பொருட்கள் தொடர்பான முழுமையான ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் துறைக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த தங்கப் பொருட்களை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு அனுப்பி பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முகாம்கள், சட்டவிரோத நிதி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய கட்டிடங்களில் இருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த தங்கப் பொருட்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








