தற்போதைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) இயங்கும் வரையில், அக்கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என ரெலோவின் மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர், இன விடுதலை இலட்சியத்திற்காக போராடிய ஒரு பெரிய அரசியல் அமைப்பு இன்று சிலரின் செயற்பாடுகளால் சீரழிந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
குறிப்பாக, தற்போதைய தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் செயற்பாடுகளே கட்சியின் பின்னடைவுக்கும் நலிவுக்கும் பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், கட்சியின் மூத்த உறுப்பினரான ஜெயராம் சுரேஸ் கொலைச் சம்பவத்திலும் செல்வம் அடைக்கலநாதனின் செயற்பாடுகள் குறித்து சந்தேகங்கள் நிலவுவதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தாம் கருதுவதாகவும் கூறினார்.
அதேபோன்று, சிரேஷ்ட உறுப்பினர் ரமேஷின் கொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும், கட்சிக்குள் எழுந்ததாகக் கூறப்படும் பல்வேறு சர்ச்சைகளுக்கும் உரிய தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டு, தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் மக்களின் உண்மையான அரசியல் பிரதிநிதித்துவ அமைப்பாக மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கட்சியில் இடம்பெறும் தவறுகள் மற்றும் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் உறுப்பினர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.
மேலும், ஈழ விடுதலைக்காக போராடிய அனைவரும் ஒரே இலட்சியத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை எனத் தெரிவித்த அவர், தமிழர் இயக்கங்களுக்கிடையேயான உள்மோதல்களே தமிழர் அரசியல் அபிலாசைகள் சிதைவடைவதற்கான முக்கிய காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
தமிழர் மக்களின் எதிர்கால அரசியல் முன்னேற்றத்திற்காக உள்பிளவுகளை களைந்து ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும், தற்போதைய அரசியல் நடைமுறைகளில் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்றும் ஏகனாதன் வியஜபவானந்தா தெரிவித்தார்.








